நல்லது சொல்வோம் : உண்டி கொடுத்தோர்... உயிர் கொடுத்தோரே -கவிஞர் ச.லக்குமிபதி.
நல்லது சொல்வோம்-7
அருட்பா படிப்போம்! அதன்படி நடப்போம்!
அருட்பெருஞ்ஜோதி என்றதும் அடுத்து தனிப்பெரும் கருணை என்று சொல்கிறார்கள் மக்கள்!
இதன் மூலம் ஒரு மகா மந்திரத்தின் சிறப்பு தெரிகிறது! வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வள்ளல் பெருமானை அனைவருக்கும் தெரிகிறது!
பசியினால் இளைத்து வீடுதோறும் இரந்தும் பசி அறாது வெற்றரை கண்டு உளம் பதைத்தேன் என்கிற வள்ளலாரின் அருமையை எல்லோரும் அறிந்தே இருக்கிறார்கள்!
மே 28 இன்று உலக பட்டினி தினம்! மக்கள் பட்டினியால் தவிக்க விடக்கூடாது என்பதல்லவா அவருடைய உயிர் கொள்கை!
உயிரிரக்கம் அவரது பெரும் கொள்கை! பசிப்பிணி போக்கும் தரும சாலையை 1867 இல் வடலூரில் ஆரம்பித்துவைத்தார்அவர்!
கடந்த 153 ஆண்டுகளாய் அணையாமல் அந்த அடுப்பு எரிந்து கொண்டிருக்கிறது!
பசியால் வயிறு எரிந்து சரிந்து வாழும் மக்களுக்கு அன்னமிட ஆசைப்பட்டவர் அல்லவா வள்ளலார்!
ஜீவகாருண்ய ஒழுக்கத்தையும் பசியாற்றும் பண்பாட்டையும் உலகிற்கு கற்றுக்கொடுத்த கருணை வானம் அவர்!
கைவீசி நடந்தால் காற்றுக்கும் வலிக்கும் என்று கைகளை கட்டியபடியே நடந்தவர்! கால் மேல் கால் போட்டு அமரவும் பயந்தவர்!
ஏர் உழவன் உழுகின்ற போது கலப்பையில் ஒரு மண் கட்டி அகப்பட்டாலும் எத்தனை மண்புழுக்கள் மரித்துப் போகும் என கண்ணீர் வடித்த வள்ளல் அவர்!
யாரேனும் தடதடவென கதவை தட்டினால் கூட யாருக்கு என்ன ஆபத்தோ என்று அலறி துடித்தவர் அவர்!
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்கிறது மணிமேகலை காப்பியம்!
வயிற்றுக்கு சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம் என்கிறார் மகாகவி பாரதி!
உலக பட்டினி தினம் ஆன இன்று பசி பிணி என்னும் கொடும்பாவியை விரட்ட வந்த வள்ளலாரை நினைப்பதுதான் எத்தனை பொருத்தம்!
வள்ளலார் நமக்கு கொடுத்த பெரிய சொத்து திருவருட்பா!
5,800 பாடல்கள் ஆறு திருமுறைகளில் தெய்வத்தோடு நேர்நின்று பேசுவதைப் போலவே வள்ளல்பெருமான் பேசுவார்! ஏசுவார்!
காதலாகி கசிந்து கண்ணீர் மல்க கரைந்து உருகுவார்! அருளமுது பருகுவார்!
கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப் போக என்பார்! ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமை உளர் ஆகி உலகியல் நடத்தல் வேண்டும் என்பது அவரது அன்பு கட்டளை!
ஆருயிர்கட்கெல்லாம் நாம் அன்பு செய்ய வேண்டும் என்று வேண்டி நின்ற அன்பின் இமயம் அவர்! அவர் நமக்குத் தந்த அருட்பாவை ஓதி உணர்ந்து, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அளவற்ற அருளைப் பெறுவோம்!
வள்ளலார் வசனத்தில் எழுதி அருளியுள்ள மனு முறைகண்ட வாசகத்தை நிறைய பேர் வாசித்து இருக்க வாய்ப்பில்லை!
மனுநீதி சோழன் தன் மகன் வீதிவிடங்கனை தேரோடும் வீதியில் வைத்து தேர் ஏற்றி மகனை கொல்லச் சொல்கிறான்!
நீதி கேட்டு ஆராய்ச்சி மணி அடைத்து வாயிலில் நிற்கின்ற ஒரு வாயில்லா பசுவின் வழக்கு ஒன்றுக்கு நீதி வழங்கி கலங்கி நிற்கின்றான்!
அப்போது என்ன பாவம் செய்தேனோ இந்த நிலை வருவதற்கு என மன்னன் அழுது புலம்புகின்றார்! அதனை சேக்கிழார் செய்யுளில் கொடுத்தார்! வள்ளலார் வசனத்தில் கொடுத்தார்!
மனுமுறை கண்ட வாசகம் என்ற நூலில் 43 பாவங்களைப் பட்டியலிடுகிறார் வள்ளல்பெருமான்! மனுநீதிசோழன் பேசுவது போல வள்ளலார் பேசுகின்றார்!
அவர் சொல்கின்ற பாவங்களை அன்றாடம் நாம் செய்து கொண்டு தான் இருக்கிறோம்!
நல்லதை கேட்டு நடக்க வேண்டிய நாம் அல்லது செய்து அல்லவா அலைக்கழிந்து போகின்றோம்!
அவர் சொல்கின்ற பாவங்களை செய்யாமலிருந்தால் நாட்டிற்கு நன்மை புரிந்தவர்கள் ஆவோம் நாம்!
நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தல் கூடாது! தானம் கொடுப்போரை தடுத்து நிறுத்தக் கூடாது! உயிர்க்கொலை செய்வோர்க்கு உபகாரம் செய்தல் ஆகாது!
வரவு போக்கு ஒழிய வழி அடைத்தல் தகாது! களவு செய்வோர்க்கு உளவு சொல்லக் கூடாது!
இரப்போர்க்கு பிச்சை இல்லை என்று மறுக்கக்கூடாது! குடிக்கின்ற நீருள்ள குளத்தை தூர்த்து விடலாகாது!
வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழித்தல் கூடாது! அன்புடையவர்க்கு துன்பம் செய்தல் கூடாது! தெய்வம் இகழ்ந்து செருக்கு அடையக்கூடாது!
வள்ளலார் இப்படி தொடர்ந்து பாவங்களை பட்டியலிட்டு அதை நாம் செய்தல் ஆகாது என்று ஆர்வமுடன் பதிவு செய்திருக்கிறார்!
இப்போது நாம் நினைத்துப் பார்ப்போம்! நல்லவர் மனதை எப்படி எல்லாம் நடுங்கச் செய்து அதில் தனி சுகம் அடைகின்றோம்!
உண்மைதானே! தானம் கொடுப்பவர்களை எத்தனை பேர் தடுத்து நிறுத்தி விடுகிறார்கள்! நமக்குத் தெரியாதா என்ன!
அதேபோல் போக்குவரத்து சாலைகளை அடிக்கடி அடைத்து விடுகிற அவலங்கள் தொடர்கதையாக தானே நடக்கிறது!
அடிக்கடி சாலைமறியல் பட்டாசு வெடித்து டிராபிக் ஜாம் செய்தல், போன்ற வற்றால் பொதுச் சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறு செய்து கொண்டு தானே இருக்கிறோம்!
தெய்வம் இகழ்ந்து செருக்கடையும் திரைப்பட கலைஞர்களை அன்றாடம் நாம் இப்போது சந்தித்து வருகின்றோம்!
இப்போது இந்து கடவுள்களை அடிக்கடி பலர் வம்புக்கிழுத்து விளையாடிக்கொண்டிருக்கும் கிறுக்குத்தனம் ஆபத்தானது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்!
அகத்தே கருத்து புறத்து வெளுத்திருக்கும் மனிதர்களை இந்த ஜகத்தை திருத்த வந்தவர் வள்ளலார்!
இறைவன் வருவிக்க உற்றேன் என்று தன் பிறப்பின் அவசியத்தை அவரே பாடி அருளியிருக்கிறார்!
வள்ளலார் வழிநடந்து வாழ்வை வெல்ல பார்ப்போம்! அருட்பா படிப்போம்! அதன்படி நடப்போம்!!
இப்படிக்கு வாரியார் தாசன் கவிஞர் ச.லக்குமிபதி வேலூர் -9
Comments
Post a Comment